Wednesday, September 14, 2011

171-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 6




பார்வதி- விரதம்..விரதம் என்கிறார்களே..அதை ப்படி கடைப்பிடிப்பது?
ஈஸ்வரன்-மனத்தினால்,சொல்லினால்,செய்கையினால் ஏற்படும் பாவங்களை விட முயல்வது விரதமாகும்.ஆகம விதிப்படி மனத் தூய்மையுடன்,உடல் தூய்மையுடன் பஞ்ச பூதங்களையும் வணங்க வேண்டும்.சூரிய சந்திரர்களை வழிபட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலோ,மரணம் வரையிலோ விரதத்தை மேற்கொள்ளலாம்.கர்மக் காட்டைச் சுட்டெரிக்கும் நெருப்பு என விரதத்தைக் கருத வேண்டும் பூ,காய்,கனி இவற்றைக் கொள்ளும் வகையிலும் விரதம் அமைய வேண்டும்.பிரமசர்ய விரதத்தையும் மேற் கொள்ள வேண்டும்.
பார்வதி-புலால் உண்பதால் ஏற்படும் தீமை யாது? உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது?
ஈஸ்வரன்-எல்லாத் தான தருமங்களும் புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மைக்கு ஈடாகாது.தன் உயிரைக் காக்கப் பிற உயிரைக் கொல்லக்கூடாது.நம் உடலுறுப்புக்களை அறுக்கும் போது நமக்கு ஏற்படும் துன்பம் போலவே பிற உயிர்களை அறுக்கும் போதும் அவ்வுயிர்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.நூறு வருடம் தவம் செய்தால் ஏற்படும் பயன் புலால் உண்ணாமையால் ஏற்படும்.தன் உயிரைக் காட்டிலும் ஒருவருக்கு இனிமை பிறிதில்லை.ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்துடன் இருந்து அவற்றிற்கு நன்மை செய்ய வேண்டும்.
பார்வதி-எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த மோட்ச தருமம் எப்படி வர்ணிக்கப்படுகிறது?தோற்றமும், முடிவும் இல்லாத மோட்ச தருமம் எப்படி உயர்ந்ததாக ஆகிறது?
ஈஸ்வரன்-மோட்சத்திற்கு உரிய வழிமுறைகள் எல்லா ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது.தருமத்தின் செயல் எதுவும் வீணாவதில்லை.யார் யார் எந்தெந்தத் தருமங்களில் உறுதியாய் உள்ளனரோ,அந்தநத தருமங்கள் மோட்ச மார்க்கமேயாகும்.மோட்சம் தான் எல்லாத் தருமங்களின் முடிவு.இதனினும் சிறந்த ஓர் உயநிலை வேறு எதுவும் இல்லை.எனவே மோட்ச மார்க்கத்தை அறிந்து கொள்வது அவசியந்தான்.இதைப் பற்றி விளக்குகிறேன்...
மோட்சம் மனதாலும் அறிய முடியா மாண்பு உடையது.மோட்ச ஞானமே உயர்ந்த ஞானமாகும்.மகரிஷிகள் அதை பரமபதம் என கொண்டாடுகிறார்கள்.அழியாததும் அந்தமில்லாததும் இன்பம் தரக்கூடியதுமான அம்மோட்சத்தை நோக்கித் தான் எல்லா உயிர்களும் பயணம் செய்கின்றன.ஆயினும் ஒழுக்கத்தால் உயர்ந்தவரே அதை அடைய முடிகிறது.இந்தப் பிறவியானது துக்க சாகரத்தில் மூழ்கித் துன்புறுகிறது.சம்சாரம் என்பது பிறப்பு,பிணி,மூப்பு என்னும் துக்கத்தால் நிறைந்துள்ளது.இறப்போ..பிறப்புக்கு வித்தாகிறது.ஆகாயத்தில் காணப்படும் விண்மீன்கள் எவ்வாறு மீண்டும்,. மீண்டும் சுற்றுகின்றனவோ அவ்வாரு தான் பிறப்பும் உள்ளது.எறும்பு முதல் யானை வரையிலுமான பல உடல்களில் சென்று உயிர் பல பிறவிகளை எடுக்கிறது.
இந்தப் பிறவியாகிய கடலிலிருந்து கரை ஏற உதவும் படகாக இருப்பதுதான் ஆத்ம ஞானம்.ஆத்ம ஞானம் என்பது உயிரின் உண்மைத் தன்மையை உணர்ந்து கர்மத் தளையிலிருந்து விடுபடும் உபாயம் ஆகும்..

(பார்வதியின் சந்தேகங்களும் ஈஸ்வரனின் பதில்களும் தொடரும் )

No comments:

Post a Comment