Thursday, September 15, 2011

172-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 7




பார்வதி- ஞானம் என்பது என்ன? வைராக்கியம் என்பது என்ன?
ஈஸ்வரன்-ஞானம் என்பது முக்திக்குரிய மார்க்கமாகும்.சம்சாரம் என்னும் காட்டை ஞானம் என்னும் தீ சுட்டு எரித்து விடும்.பொருள்களிடத்து பற்றற்ற மன நிலை கொண்டு சம்சாரத்தில் வெறுப்பு ஏற்படுத்தும் முயற்சியே ஞான நல்வழியாகும்.முட்டாள்கள் ஆயிரம் காரணங்களைக் கற்பித்துக் கொண்டு துன்பம் அடைகிறார்கள்.ஆனால் ஞானிகள் துன்பம் என்று எதையும் கருதுவதில்லை.சாதாரண மக்கள் வேண்டியது கிடைத்துவிட்டால் தலை கால் தெரியாமல் குதித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.துன்பம் வந்து விட்டாலோ சொல்லவே வேண்டியதில்லை.எல்லாமே தொலைந்தது என பதறுகிறார்கள்.ஒரு இலை அசைந்தாலும் புயல் வந்தது போல பரிதவிக்கிறார்கள்.
மனிதப்பிறவியில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வருகின்றன.எந்தப் பொருளில் பற்று ஏற்படுகிறதோ அப்போது அதன் நிலையாமையை உணர்தல் வேண்டும்.அழியப் போகிற ஒன்றின் மீது ஏன் இவ்வளவு ஆசை..பற்று என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது பற்றற்ற தன்மை தோன்றும்.வைராக்கியம் தோன்றும்.
ஆழ்கடலில் வேறு வேறு மூலைகளில் கிடக்கும் நுகத்தடிகள் பல காலம் அலைந்து திரிந்து ஒன்று சேர்ந்து பிரிதல் போல உயிரும் ..உடலும் கலந்து பின் ஒரு கால கட்டத்தில் பிரிகின்றன.பொருள்களின் உண்மைத்தன்மையை..நிலையாமையை அறிந்தவர்கள் அவற்றில் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.நால்வகைக் கதிகளில் எந்தக் கதியாயினும் அதில் துன்பம் தான்.அழியக் கூடிய..பிரியக் கூடிய அனைத்திலும் துன்பம் தான்.பொருளைச் சேர்க்கும் போதும் துன்பம்..காக்கும் போதும் துன்பம்..இழக்கும் போதும் துன்பம்.பொருள் ஆசை உள்ளவர்க்கு உலகில் உள்ள அனைத்துப் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டினாலும் அந்த ஆசை நிரம்பாது.விரும்பியவை அனைத்தும் கிடைத்து விட்டால் இன்பம் கிடைக்குமா? எனில் அப்போதும் இன்பம் கிடைக்காது.மேலும்..மேலும் ஆசை வளரும்.ஆனால் ஆசையே இல்லாத போதுதான் இன்பம் ஏற்படும்.இது பொருள்கள் மீது கொள்ளும் வெறுப்பினால்..வைராக்கியத்தால் ஏற்படும்.
அறிவு என்பது ஒப்பற்ற ஆற்றலால்.. யார் ..ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்கி ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்களை துன்பம் அணுகாது.ஐம்பொறிகளை அடக்க முடியாது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனப் பொறி வழிச் சென்று அலைபவர் ஒரு நாளும் இன்பம் அடையார்.
கொடிது..கொடிது..காமம் கொடிது.அஞ்ஞானிகள் இதன் வலையில் வீழ்ந்து கடைத்தேற முடியாது... துன்புற்று பாவப் படுகுழியில் மீண்டும் மீண்டும் வீழ்கின்றனர்.நெருப்பெனத் தவம் இயற்றும் உண்மைத் துறவிகளை இந்த ஈனக் காமம் நெருங்குவதில்லை.ஐம்பொறிகளையும் நிலைகுலையச் செய்யும் இந்தக் காமத்தை வெற்றி கொள்ளாதார்க்கு நற்கதி இல்லை.
காமவெறி கொண்டு அலைவோர் செய்ய வேண்டிய நற்காரியங்களில் ஒன்றைக் கூட செய்ய இயலாது, மரண காலத்தில் சொல்ல முடியாத கொடிய துன்பத்தில் வீழ்ந்து தத்தளிப்பர்.பொருளே கதி என மயங்கிக் கிடப்போரையும்,காம இன்பமே இன்பம் என மயங்கிக் கிடப்போரையும் சிங்கம் ஒன்று மான் குட்டியைத் தூக்குவது போல எமன் தூக்கிக் கொண்டு செல்லும் போது புலம்பி அழுது என்ன பயன்?

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈஸ்வரனின் பதில்களும் தொடரும்)

No comments:

Post a Comment